‘மூன்றாம் பிறை‘ படத்தில் வரும் ‘பூங்காற்று புதிதானது‘ பாடலில் வரும் வரிகள் இவை:
நதி எங்கு செல்லும்?
கடல்தன்னைத் தேடி.
பொன்வண்டு ஓடும் மலர் தேடி.
என் வாழ்வில் நீ வந்தது விதியானால், (மலருக்கு வண்டுபோல், கடலுக்கு ஆறுபோல்)
நீ எந்தன் உயிர் அன்றோ!
ராஜாவின் 4 வரி, 20 சொல் சரணத்தில் விரிவாகக் கதை பேச இடமே இல்லை. ஆனாலும் அந்த நாயகனின் உள்ளக்கிடக்கையை எவ்வளவு ஆழமான வாதமாகக் கண்ணதாசன் உட்காரவைத்திருக்கிறார் பாருங்கள்! சொற்சிக்கனமும் கட்டுக்கோப்பும் மெட்டுக்கிணக்கமும் எவ்வளவு இனிமை!
![](https://i0.wp.com/nchokkan.com/wp-content/uploads/2022/08/Profile_picture_of_Kannadasan.jpeg?resize=138%2C190)
இதே இயக்குநர், இசையமைப்பாளருடைய வேறொரு படத்தில் (சதி லீலாவதி) வேறொரு பாடலில் (மகராஜனோடு ராணி) இதே கடல், ஆறு உவமையை வாலி இப்படிப் பயன்படுத்தினார்:
கங்கைக்கொரு வங்கக் கடல்போல்
அவன் வந்தான்.
அந்தப் படத்தில் நாயகனுக்கு 2 நாயகிகள். கங்கைக்கு ஒரு வங்கக் கடல்தான், ஆனால் வங்கக் கடலில் பல ஆறுகள் கலக்கும்.
கண்ணதாசனின் பாட்டுத் தலைவனும் கடல்தான். ஆனால் ஒரே ஆற்றை உயிரெனக் கொள்ளும் கடல்!